Saturday, October 1, 2016

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?


குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?


டாக்டர் கு. கணேசன்

குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 22 கோடி குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. சுயசுத்தமும் சுற்றுப்புற சுகாதாரமும் குறைவதால் இது உண்டாகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பெரியவர்களுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் இளைய வயதினருக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.



காரணங்கள்

அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களை திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண்தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவி சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழுத் தொல்லை ஏற்படுவதற்குத் துணை போகின்றன. சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் தின்னும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவி சுத்தம் செய்யத் தவறினாலும் குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

புழுக்கள் வளரும் விதம் குடல்புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல் புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு. பெண் புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் அவை புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல் உணவைச் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’க்கள் எனும் குறும்புழுக்கள் வெளிவரும்.

ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவற்றைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று சுமார் 4 நாட்கள் அங்கே தங்கும். பிறகு அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். பிறகு அங்கிருந்து உணவுக்குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாக குடலுக்கு வந்து சேரும். இந்த ‘சுற்றுலா’வுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும். அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழுப் புழுக்களாக வளர்ச்சி பெற்றுவிடும். அதன்பிறகு நமக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும்.



உருண்டைப் புழு

குடல்புழுக்களில் பரவலாக நம்மைப் பாதிப்பது ‘உருண்டை புழுக்கள்’ (Round worms). பார்ப்பதற்குப் பழுப்பு நிறத்தில் ஒரு சரடு மாதிரி இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு 20 புழுக்களிலிருந்து 100 புழுக்கள் வரை இருக்கலாம். ஓர் ஆண் புழுவின் நீளம் 10 - 20 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 30 - 40 செ.மீ. ஒரு பெண்புழு ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் முட்டைகளை இடும். ஒரு புழுவானது ஒரு வருடம் வரை நம் குடலில் வாழும். உருண்டைப் புழுக்கள் குடலில் இருந்தால் அந்த நபருக்கு அடிக்கடி வயிற்றில் வலி வரும். பசி குறையும். சாப்பிடப் பிடிக்காது. குமட்டல் வரும். உணவு செரிமானம் குறையும். உடல் மெலியும். எடை குறையும். இந்தப் புழுக்கள் புரதச் சத்தை விரும்பிச் சாப்பிடுவதால், இந்த நபர்களுக்குப் புரதச் சத்துக் குறைவு நோய் (Protein Malnutrition) ஏற்படும். இந்தப் புழுக்களின் உடலிலிருந்து ஒருவித நச்சுப்பொருள் சுரக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, சருமத்தில் அரிப்பு, சிவந்த தடிப்புகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படும். இளைப்பு ஏற்படலாம். இந்தப் புழுக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டால் ஒரு பந்துபோல் திரண்டு குடலை அடைத்துக்கொள்ளும். அப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

குழந்தைகள் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உருண்டைப் புழுக்கள் சாப்பிட்டுவிடுவதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவாக உடல் வளர்ச்சிக் குறைவும் மனவளர்ச்சிக் குறைவும் ஏற்படுகின்றன. கொக்கிப் புழு அமைப்பில் உருண்டைப் புழுக்களைப்போலவே இருக்கிற ‘கொக்கிப் புழுக்கள்’ (Hook worms) அளவில் மட்டும் மிகச்சிறியவை. இவற்றின் லார்வாக்கள் மனிதப் பாதத்தின் சருமத்தைத் துளைத்துக் கொண்டு நேரடியாகவே ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாக குடலுக்கு வந்து முழு புழுக்களாக உருமாறுவதுண்டு. ஓர் ஆண் புழு 8 மி.மீ நீளமிருக்கும். பெண் புழு 12.5 மி.மீ. நீளமிருக்கும். இவற்றின் அகலம் அதிகபட்சமாக 5 மி.மீ. இருக்கும். இவை மூன்று ஆண்டுகளுக்கு மேல் நம் குடலில் உயிர் வாழும். இவற்றின் வாய்ப்பகுதி கொக்கிபோல் வளைந்திருக்கும். அதில் நான்கு சூரப்பற்கள் இருக்கும். குடல் சுவற்றில் கொக்கி கோர்த்ததுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். குடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி வாழும். இத்தோடு புழுக்கள் கடித்த குடல் பகுதியிலிருந்து ரத்தம் தொடர்ந்து கசியும். இவ்வாறாக குடலிலிருந்து ரத்தம் வெளியேறுவதால், கொக்கிப்புழுவால் பாதிக்கப்பட்ட நபருக்கு வயிற்றுப் பிரச்னைகளோடு ‘ரத்தசோகை நோய்’ (Anaemia) ஏற்படுவதுதான் முக்கியமான பாதிப்பு.

ஒரு கொக்கிப் புழுவானது நாளொன்றுக்கு 0.2 மி.லி. ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒருவரின் குடலில் ஒரே நேரத்தில் ஆயிரம் புழுக்களுக்கும் அதிகமாக வசிப்பதுண்டு. அப்படியானால் இந்தப் புழுக்கள் தினமும் எவ்வளவு ரத்தத்தைக் குடித்து நம்மை பாதிக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். நடைமுறையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாதங்களில் பித்தவெடிப்பு, சேற்றுப்புண் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட வேலை செய்பவர்களுக்குக் கொக்கிப் புழு பாதிப்பு மிக அதிகம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ரத்தசோகை நோய் ஏற்பட முக்கியக் காரணம் கொக்கிப்புழு தொல்லைதான். குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படும்போது நினைவாற்றல் குறைகிறது. கல்வித்திறன், சிந்தனைத்திறன் என ஒட்டுமொத்த செயல்திறனும் பாதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு இது ஏற்படும்போது தாயையும் சேயையும் பாதிக்கிறது. கொக்கிப்புழு லார்வாக்கள் பாதங்களைத் துளைத்து உடலுக்குள் நுழைகின்றன. அப்போது பாதங்களில் அழற்சி, அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம். ஒருவருக்குப் படை எதுவுமில்லாமல் பாதங்களில் அரிப்பு ஏற்பட்டால் கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நூல் புழு

குடல்புழுக்களில் மிகச் சிறியவை ‘நூல் புழுக்கள்’ (Thread  worms). பார்ப்பதற்கு வெட்டிப்போட்ட பருத்தி நூல்போல் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஓர் ஆண் புழுவின் நீளம் 2 லிருந்து 4 மி.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 8லிருந்து 12 மி.மீ. இவற்றின் தடிமன் 0.1 லிருந்து 0.5 மி.மீ.பொதுவாக இப்புழுக்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும். மற்ற புழுக்கள் எல்லாம் குடலில்தான் முட்டை இடும். இவை மட்டும் மனிதனின் மல வாயில் முட்டை இடுகின்றன. இதனால் அங்கு அரிப்பு ஏற்படும். இரவில் ஏற்படும் மலவாய் அரிப்புதான் இந்தப் புழுக்களால் ஏற்படுகிற பெருந்தொல்லை. இதன் விளைவால் பலருக்கும் இரவில் தூக்கம் கெடும். நூல் புழுக்களைப் பொறுத்தவரை ஆரோக்கியத்துக்கு அதிகமாகக் கெடுதல் தருவதில்லை.

சாட்டைப் புழு

பார்ப்பதற்கு சாட்டையைப்போல ஒரு முனை தடித்தும் மறுமுனை ஒல்லியாக நீண்டும் இருப்பதால் இப்புழுவுக்குச் ‘சாட்டைப்புழு’ (Whip worm) என்று பெயர். ஓர் ஆண் புழுவின் நீளம் 3 லிருந்து 4 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 4 லிருந்து 5 செ.மீ. குழந்தை இரவில் திடீரென்று உறக்கத்தில் எழுந்து அழுதால் அல்லது வயிற்றுவலி என்று சொன்னால் சாட்டைப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படும். பசியே இருக்காது. சாப்பிடமாட்டார்கள். எடை குறையும். உடல் மெலியும், இவர்கள் ஒல்லியாகவும் செயலில் மந்தமாகவும் இருப்பார்கள்.

நாடா புழு

ஒரு பாவாடை நாடாவைப்போல வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கிற புழுக்களுக்கு ‘நாடா புழுக்கள்’ (Tape worms). என்று பெயர். இவற்றைத் தொட்டுப் பார்த்தால் தட்டையாக இருக்கும். இதனால்  ‘தட்டைப் புழுக்கள்’ என்றொரு பெயரும் உண்டு. இவற்றில் பல வகைகள் உள்ளன. முக்கியமானவை மாட்டிறைச்சி நாடா புழு (Beef Tape worm), பன்றி இறைச்சி நாடா புழு (Pork Tape worm). மீன் இறைச்சி நாடா புழு (Fish Tape worm), நாய் நாடா புழு (Echinococcus granulosus). ஒவ்வொரு புழுவும் ஒரு ரிப்பன் மாதிரி 5 மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை நீளமாக இருக்கும். ஒருவருக்கு ஒன்றிரண்டு புழுக்கள்தான் இருக்கும். ஆனால், 15 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.சாதாரணமாக எல்லோருக்கும் இந்தப் புழுக்கள் தொற்றுவதில்லை. மாட்டு இறைச்சி / பன்றி இறைச்சி / மீன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் மற்றும் நாயுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இவை தொற்றுகின்றன. மாடு மற்றும் பன்றியின் தசைகளில் இந்தப் புழுக்களின் லார்வாக்கள் வசிப்பதே இதற்குக் காரணம். வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் இதனால் வரலாம். மேலும் கல்லீரல், நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் ‘நீர்க் கட்டிகள்’ (Hydatid cysts) வளர்வதும் உண்டு. இது குழந்தைகளுக்கு அவ்வளவாக தொற்றுவதில்லை. பெரும்பாலும் பெரியவர்களுக்கு தொற்றுவதே நடைமுறை.

பரிசோதனை என்ன?

பெரும்பாலான குடல் புழுக்களை நோயாளிக்கு மலப்பரிசோதனை செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மலத்தில் குடல் புழுக்களின் முட்டைகள் வெளிவருவதைக் கண்டறிந்து, எந்தப் புழுவின் முட்டை, எந்தக் குடல்புழு நோய் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் குடல் புழுக்களின் லார்வாக்கள் நுரையீரலுக்குள் பயணம் செய்யும்போது ரத்தத்தில் `இயோசினோபில்’ அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த எண்ணிக்கையை வைத்து மறைமுகமாக குடல்புழு தொல்லையைக் கணிப்பதும் உண்டு. நாடா புழுக்களைக் கண்டறிய, பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட தசைகளின் திசுக்கள் ஆய்வு செய்யப்படும். அதன் மூலம் நாடாபுழு பாதிப்பை தெரிந்து கொள்ளலாம். நாடா புழுக்களின் பாதிப்பு இருப்பவர்களுக்கு மலத்தில் வெள்ளை நிறத்தில் வெட்டிப்போட்ட ரிப்பன் மாதிரி இவற்றின் உடற்பகுதிகள் வெளியேறும். இவற்றைப் பரிசோதித்தும் இந்தப் புழுக்களை உறுதி செய்யலாம்.

சிகிச்சை என்ன?

குடல் புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் பல மருந்துகள் கிடைக்கின்றன. எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மருத்துவர் யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். இந்த மருந்துகளில் நாடா புழுக்கள் தவிர மற்ற புழுக்களுக்கு ‘அல்பென்டசோல’ மாத்திரை அல்லது மருந்து முக்கியமாகத் தரப்படுவதுண்டு. நாடா புழுக்களுக்கு ‘நிக்லோசமைடு’ மாத்திரைகள் தரப்படுவதுண்டு. அதே வேளையில் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல் புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது.

தவிர்க்க என்ன வழி?

* சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புற சுகாதாரம் மேம்பட வேண்டும்.
* குளியலறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
* திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக்கூடாது.
* கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்,
* சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக்கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.
* நகங்களை பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.
* குழந்தைகள் விரல் சூப்பக்கூடாது.
* குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம்.
* எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
* ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக்கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளை குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதற்கு ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
* சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாது.
* காய்கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு  தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
* நன்றாகக் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.
* பாதுகாக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.
* காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்
* அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். பித்தவெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.
* தரமான கடைகளில் மட்டுமே இறைச்சிகளை வாங்க வேண்டும்.
* மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்தபின் சாப்பிட வேண்டும்.
* வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கிக் கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.  

சமையலுக்கு முன்பு காய்கறிகளை கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும் குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

No comments: