Friday, April 20, 2012


பாரதியார் கவிதைகளும் புதுமை பெண்களும்:

            நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை கொண்டு பெண்ணாடிமை செய்வோரை தன் பார்வயாலே சுட்டெரிக்க வேண்டும், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டாம் என்று சொன்ன மூடர்கள் அழிய பெண்கள் உயர்படிப்பு பெறவேண்டும், உயர்படிப்பு அதன்மூலம் நல்லாட்சி நடத்தி ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டவன் பாரதி. அப்போது அவன் கனவு மெய்யானதோ தெரியாது. ஆனால் இன்று பல புதுமை பெண்கள் இந்தியாவில் இருப்பதை கண்டு நிச்சயம் அவன் ஆத்மா சந்தோஷங்கொள்ளும்.
 
           நிற்க. இன்றைய செய்தித்தாள் (அல்லது இ-பேப்பர்) படித்தீர்களா? அதில் நீங்கள் கண்ட புதுமை பெண்களை மட்டும் (நற்செயல், சமூக சேவை, கள்ள காதல், திருட்டு, லஞ்சம், ஊழல் - என்று அனைத்தும் தான்) பட்டியலிட்டு ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். அட்டவனையில் அவரவர் செயல்களுக்கேற்ப மதிப்பெண் கொடுங்கள். நற்செயலுக்கு + ve மதிப்பெண்களும், தீயதிற்கு - ve மதிப்பெண்களும் கொடுத்து (100 க்கு) பின்னால் அவற்றின் சராசரியை பாருங்கள். நிச்சயம் 30% குறைவான மதிப்பெண்களே வரும்.
 
           பெண்விடுதலை என்பது கலாச்சார மீறல் அல்ல. பெண்விடுதலை என்பது அடுத்தவரை மதியாமை அல்ல. பெண்விடுதலை என்பது மிருகத்தனம் அல்ல. ஆண்களிடம் அடிமையாய் வாழ்ந்த பெண்களை படிக்கச்சொல்லி அவர்களையும் சமுதாயத்தில் ஒரு அங்கமாக பாவித்து சமநிலையை ஏற்படுத்த நினைத்தான் பாரதி. ஆனால் வளந்து நிற்பதோ 'முள்' காடு. புதுமை என்று சொல்லி கலாச்சார மீறல்களில் ஈடுபடும் பெண்கள்தான் ஏராளம். பெரியோரை மதிக்காமல், மிருகத்தனமான வாழ்க்கைக்கு இன்று வித்திட்டு கொண்டுள்ளனர். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம் என்பதை மறந்துவிட்டார்கள்.
 
            ஆண்களுக்கு இணை என்ற பாரதி கனவு பல துறைகளில் இன்று பெண்களை முன்னேற வைத்துள்ளது. அதோடு ஆண்களின் கெட்ட செயல்களிலும் (குடி, சிகரெட், கள்ள காதல், திருட்டு, லஞ்சம், ஊழல் - என்று அனைத்தும் தான்) இணையாக செய்ய முடியும் என்றும் நிரூபித்துள்ளனர். செய்தித்தாள் பாருங்கள். பாரதி கனவு இன்று நனவாகி (partial) இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பெண்கள் போகப்பொருளாக கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது என்ற கூற்று மட்டும் மாறவேயில்லை.  விளையாட்டில் ஒரு சானியா, அறிவியலில் ஒரு கல்பனா என்று ஒருபுறம் பார்த்து ரசிக்கிறோம். விமான பணிபெண்ணாக, ஹோட்டல் வரவேற்பாளராக, விளையாட்டுத்துறையில் CHEER GIRLS ஆக, பெண்கள் இன்றும் போகப்பொருளாவதை நாமே பார்த்து ரசிக்கிறோம்.
 
          பெண்விடுதலை பாரதியின் கனவுதான். இன்றைய பெண்களின் கனவல்ல.

No comments: