Tuesday, March 27, 2012

நம்முடைய பொழுதுகள்
ஒவ்வொன்றையும்
என் நினைவுப் பேழையில்
மிகக் க‌வனமாகச்
சேகரித்து வைத்திருந்தேன்

வேடிக்கையாகப் பேசத் தொடங்கிய
அந்த முன்மதிய மழை நாள்

உன் வருகைக்காக
நகம் கடித்துக் காத்திருந்த பகல்கள்

சிறு புன்னகையை
எப்போதும்
தேக்கி வைத்திருக்கும்
உன் விழிகளிலிருந்து
மீள முடியாமல் தவித்த பின்னிரவுகள்

செல்லக் கோபங்களுக்குப் பிறகு
உன் அன்பில் திளைத்த நாட்கள்

தொலை தூரத்திலிருந்து
உன் வசீகரக் குரல் கேட்டுப்
பரவசப்பட்ட நொடிகள்

நம் இயலாமைகளின்
உச்சங்கள் வெளிப்பட்டு
என் கனவு நீர்க்குமிழியென‌
உடைந்த அந்த இறுதிக் கணம்

என ஒவ்வொன்றையும்
மிகக் கவனமாகச்
சேகரித்து வைத்திருந்தேன்

தனிமை தளும்பும்
இந்த அதிகாலை வேளையில்
அப்பேழையைத் திறந்து
ஒவ்வொரு பொழுதாக‌
எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

வலிகளைக் கிளரும்
அவற்றை அழித்துவிடும் என் முயற்சிக‌ள்
தோல்வியையே த‌ழுவுகின்ற‌ன‌

அவற்றில் நிரம்பியிருக்கும்
உன்னுடைய பிரியங்களை
இன்னும் இன்னும் வெறியுடன்
நேசிக்கத் தொடங்குகிறேன்     thanks to tamil

No comments: