Thursday, September 15, 2016

செட்டிநாடு மட்டன் வறுவல்

அசைவ உணவுகளிலேயே மட்டன் தான் உடலுக்கு குளிர்ச்சியை தருவது. அதிலும் இந்த மட்டனை எந்த மாதிரியான வகையில் சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவையே அருமையாக இருக்கும். மேலும் அசைவ உணவுகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்டைல் உணவு தான் பிரபலமானது. இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைலில் எப்படி மட்டனை வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மட்டன் கலவைக்கு...
மட்டன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செட்டிநாடு மசாலாவிற்கு...
பேபி வெங்காயம் - 4
பூண்டு - 5 பல்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 இன்ச் துண்டு
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - 10
மிளகு - 8
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மட்டனை நன்கு கழுவி, அதோடு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து பிசைந்து, தனியாக ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அத்துடன் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, நன்கு கலந்து, தீயை குறைவில் வைத்து 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் அதில் 1 1/2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
அதே சமயம் மறுபக்கத்தில் இருக்கும் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, கிராம்பு, பட்டை, கசகசா, சோம்பு, பிரியாணி இலை மற்றும் மிளகு போன்றவற்றை சேர்த்து, வறுக்க வேண்டும்.
பின் அதனை நன்கு குளிர வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 4-5 நிமிடம், தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு 2-3 நிமிடம் கிளற வேண்டும்.
இப்போது அதில் துருவிய தேங்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, குக்கரில் உள்ள மட்டனை கலவையை அப்படியே இந்த வாணலியில் ஊற்றி, நன்கு தண்ணீர் சுண்டும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான செட்டிநாடு மட்டன் வறுவல் ரெடி!!! இதனை சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றோடு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

No comments: