Thursday, September 15, 2016

பிரண்டைத் துவையல்

பிரண்டைத் துவையல் செய்யும் முறை:
********************************
பிரண்டையை வெறும் கையில் சுத்தம் செய்தால், அரிக்கக் கூடும். கையிலே கல் உப்புக் கலந்த தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணையையோ தடவிக் கொண்டு சுத்தம் செய்யலாம். இல்லையென்றால் டிஸ்போஸபிள் கிளவுஸ் ( தலைமுடிக்குக் கலரிங் செய்யும்போது உபயோகிப்போமே ) அணிந்து கொண்டு சுத்தம் செய்யலாம்.
முதலில் தண்ணீரில் அலசி விட்டு, தண்ணீர் வடிந்த பின், துண்டுகளாக்கி, நார் உரித்து சுத்தம் செய்யவும். நீளமாக இருந்தால், சிறு துண்டுகளாக்கவும்.
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி விதை, (தலா ஒரு ஸ்பூன்) காரத்துக்கு ஏற்ப வர மிளகாய் இவற்றை கொஞ்சமாய் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
சின்ன வெங்காயம் கொஞ்சம் வதக்கிக் கொள்ளவும்.
பிரண்டையை கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து நிதானமாக வதக்கவும். நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும்வரை.
வதக்கிய, வறுத்த பொருட்களோடு உப்பு, புளி சேர்த்து, கொஞ்சமாய் நீர் சேர்த்து அரைக்கவும். மற்ற துவையலை விட, இதற்குக் கொஞ்சம் கூடுதலாய் புளியும் காரமும் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட, இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
அஜீரணக் கோளாறுகளை நீக்கும் அருமருந்து இந்தப் பிரண்டை.. இதில் ஏராள மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது..

No comments: