Saturday, September 29, 2012

ஆன்மிக சிந்தனைகள் »பாரதியார்


எங்கும் நிறைந்திருப்பது சக்தியே. அது எல்லையில்லாதது. அதற்கு முதலுமில்லை. முடிவுமில்லை. சக்தியை யாரும் அசைக்க முடியாது. ஆனால், அது எதையும் அசைக்க கூடியது. அடிப்பதுவும் சக்தியே. துரத்துவதும் சக்தியே. கூட்டுவதும் சக்தியே. எல்லாம் சக்தியினாலேயே நிகழ்கிறது. பிணைப்பதும், கலப்பதும், உதறுவதும், புடைப்பதும், வீசுவதும், சுழற்றுவதும், கட்டுவதும், சிதறடிப்பதும், தூற்றுவதுமான அனைத்தும் சக்தியே அன்றி வேறில்லை. ஒன்றாகி இருப்பதும், பலவாகி நிற்பதும் சக்தியே. குளிர்ச்சியும், வெம்மையும் நடைபெறச் செய்வது சக்தியின் தன்மையினால் தான். காதலால் உள்ளம் உருகச் செய்வதுவும் சக்தியே. பகைமை, உறவு, உறுதி, அச்சம் ஆகிய எல்லா உணர்வுகளுமே சக்தியின் வெளிப்பாடுகளே.தெளிவும், மயக்கமும் அவளே. ஐம்பொறிகளால் முகர்வதும், சுவைப்பதும், தீண்டுவதும், கேட்பதும், காண்பதும் எல்லாம் சக்தியின் வேலைகளே. சக்தி பிரம்மாவின் மகளாகவும், கண்ணனின் தங்கையாகவும், சிவனின் மனைவியாகவும் இருக்கிறாள்.அப்போது உமையவளாக இருக்கிறாள். அவளே கண்ணனின் மனைவியாகவும், சிவனின் மகளாகவும், பிரம்மனின் தங்கையாகவும் இருக்கிறாள். அப்போது லட்சுமியாக இருக்கிறாள். அவளே மும்மூர்த்திகளுக்கும் தாயாகவும் விளங்குகிறாள்.
இப்படிப்பட்ட பெருமை மிக்க சக்திதாயே! நீ வாழ்க!

No comments: