Friday, June 27, 2014

இறைவனுடன் நெருங்கியிருப்பவர்

* உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக தண்டிக்கவும் மாட்டார்.
* எல்லாவற்றையும் கடவுள் செய்வார் என்று எதிர்பார்க்கும் குணம் கூடாது. நம் கடமையை நாமே செய்வது குறித்தும், எந்தச்சூழலில் வாழ்கிறோம் என்பது குறித்தும் அறியும் அறிவை இறைவன் நமக்கு தந்துள்ளதை மறக்கக்கூடாது.
* அமைதியாக இருப்பவர் இறைவனுக்கு நெருக்கமானவர். வீண் விவாதம், தேவையற்ற வாக்குவாதங்களில் அவர் ஈடுபடமாட்டார்.
* அன்பு, ஆனந்தத்தை பிறருக்கு கொடுக்கும் வாய்ப்பு ஒவ்வொரு விநாடியும் வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* சில விஷயங்களில் நம் மனதில் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. எதிர்பார்ப்பு உண்டாகும் போது வாழ்வில் விருப்பு, வெறுப்பு தவிர்க்க முடியாததாகி விடும்.
* சாப்பாட்டின் முன் அமரும் போது, பரிமாறப்பட்டதை மகிழ்ச்சியோடும், நன்றியோடும் அன்போடும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- சத்குரு ஜக்கி வாசுதேவ்

Thursday, June 26, 2014

வெண்ணெயும் இறைச்சியும் ஆரோக்கியத்துக்கு நல்லதே!

வெள்ளைக்காரர் சொல்வதே வேதம் என்ற எண்ணம் நமக்கு - அதிலும் வெள்ளைக்காரர்கள் கொடுத்த ஆங்கிலவழிக் கல்வி படித்த நமக்கு வெண்ணெய் என்றாலே ரத்தக்குழாயில் மாரடைப்பை ஏற்படுத்தும் நஞ்சுருண்டையாகவே காட்சி தருகிறது. “அப்படியெல்லாம் இல்லை, வெண்ணெய் நல்லது” என்று அமெரிக்காவின் டைம் பத்திரிகை இப்போது அட்டைப்படக் கட்டுரையாகவே வரைந்து தள்ளிவிட்டது.

“உடலில் எடை கூடவும் தொப்பை வளரவும் வெண்ணெய்தான் காரணம் என்று இதுநாள்வரை ஆராய்ந்து கூறியதெல்லாம் தவறு, சர்க்கரையும் பதப்படுத்தப்பட்ட பெட்டியில் அடைக்கப்பட்ட ஆயத்த (ரெடிமேட்) உணவுகளும்தான் உடல் பருமனுக்குக் காரணம்” என்று விஞ்ஞானிகள் இப்போது அறிவிக்கின்றனர்.

'கிளினிகல் நியூட்ரிஷன்' என்ற அமெரிக்கப் பத்திரிகை, அறிவியல்பூர்வமான பல ஆய்வுகளை நடத்திய பிறகு இந்த முடிவுக்கு வந்ததாகவும், வெண்ணெயினால் மாரடைப்பு வருவதில்லை என்றும் உரத்து அறிவித்திருக்கிறது.

'பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல்' என்ற பத்திரிகையோ, பாலிலிருந்து கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் போன்ற பொருள்களைச் சாப்பிடுவதற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று முழங்கியிருக்கிறது.

பீதியில் ஆழ்த்தினர்

வெண்ணெய், நெய் சாப்பிட்டால் உடல் பருக்கும், ரத்தத்தில் கொழுப்பு சேரும், அந்தக் கொழுப்பு சிறு துகள்களாகி ரத்தக்குழாயில் பயணிக்கும், இதயத்துக்குச் செல்லும் குழாய்களில் அது போய் அடைத்துக்கொள்ளும், அப்போது மாரடைப்பு ஏற்படும் என்று விரிவாகச் சொல்லி அனைவரையுமே பல்லாண்டுகளாக பீதியில் ஆழ்த்திவிட்டனர்.

இயற்கையில் கிடைத்த இந்த வெண்ணெயை இப்படி வில்லனாக்கிய அதே சமயம், சிகரெட்டுகளுக்கும் மதுபானங்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு “உபயோகியுங்கள், உற்சாகமாக இருங்கள்” என்று வழிகாட்டினார்கள் மேற்கத்திய தொழிலதிபர்கள். சிகரெட்டும் மதுபானமும் உடல் நலத்துக்கு எந்த அளவுக்குக் கேடு செய்யும் என்பதை விளக்க வேண்டிய தேவையே இல்லை. புற்றுநோய் வராமலிருக்க புகையிலைப் பொருள்களின் பக்கமே போகாதீர்கள் என்று இப்போது உலக அளவில் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

புல்தரை வளர்த்து, அதில் கால்நடைகளை மேயவிட்டு, பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கலப்பிடமில்லாமல் தயாரித்து உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அயர்லாந்தில், “வெண்ணெய் சாப்பிடுகிறீர்களா, அப்படியானால் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்” என்று நிபுணர் ஒருவர் இரக்கமில்லாமல் எச்சரித்தார். இதுவும் மக்களுடைய மனங்களில் ஆழப்பதிந்தது.

மாவும் சர்க்கரையுமே எமன்

1970-களின் இறுதியில் தொடங்கி சமீபகாலம்வரை வெண்ணெய்க்கு எதிராக இப்படிப்பட்ட பிரச்சாரங்களே ஓங்கியிருந்தன. கார்போஹைடிரேட் என்று அழைக்கப்படும் மாவுச்சத்தும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளும்தான் உடல் பெருக்கக் காரணம் என்று சமீப காலங்களாகத்தான் அடுத்தடுத்து உறுதி செய்துள்ளனர்.

பால்பொருள்களும், செந்நிற இறைச்சியும்தான் உடலுக்குக் கேடு செய்யும் உணவுகள் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பிரச்சாரமே செய்தனர். அது, உணவு, சுகாதாரம் குறித்து மக்களுடைய மனங்களில் கவலை பரவியிருந்த காலம். எனவே பிரச்சாரம் எடுபட்டது. அறையில் நிலவும் சாதாரண வெப்பத்தில் உருகாத வெண்ணெய், பன்றிக்கொழுப்பு போன்றவற்றால் ஆபத்து என்றும் சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற திரவங்களால் ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டது.

விலக்கியதால் மாரடைப்பு

இப்படிப் பிரச்சாரம் செய்து வெண்ணெய் சாப்பிடுவதை அறவே விலக்கிவிட்டதால்தான் மாரடைப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று லண்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் அசீம் மல்ஹோத்ரா குறிப்பிட்டிருக்கிறார். வெண்ணெய் போன்றவைதான் இதயத்தைக் காப்பவை என்றும் அவர் குறிப்பிடுகி றார். வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றில் வைட்டமின் 'டி' இருக்கிறது. இது இல்லாவிட்டால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற செந்நிற இறைச்சி வகைகளில் இரும்புச்சத்தும் சி.எல்.ஏ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் காஞ்சுகேடட் லினோலெய்க் அமிலமும் அதிகம் இருக்கின்றன. இவ்விரண்டும் பொதுவான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துபவை. புற்றுநோய் வராமல் தடுக்கும் குணங்கள் உள்ளவை என்று இப்போது அறியப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால்தான் மாரடைப்பும் சர்க்கரை வியாதியும் ஏற்படுகின்றனவே தவிர இயற்கையான செந்நிற இறைச்சியால் அல்ல என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தளவு கொழுப்பு உள்ளவை என்று விளம்பரப்படுத்தப்படும் உணவுப் பண்டங்களையே இப்போது வாங்கி உண்கின்றனர், அவற்றில் அதிக சர்க்கரை இருக்கிறது என்று எச்சரிக்கிறார் மல்ஹோத்ரா.

Saturday, June 14, 2014

தெய்வ அருள் கிடைப்பது எப்படி?

* இதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.
* துணிவு, உள்ளத்தூய்மை, லட்சியத்தில் ஈடுபாடு, லாப நஷ்டங்களில் சிந்தனைஇல்லாமல் இருப்பதுவே யோகத்தின் ரகசியம்.
* ஒவ்வொருவரும் தன் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம். அவற்றுள் பிறந்த நாட்டுக்கு உழைப்பதை முதன்மையான கடமையாகக் கொள்வதே அனைத்திலும் முக்கியமாகும்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி...பிறரை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, நல்லதைச் செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.
* தாய் நம் உடலை வளர்க்கிறாள். தாய்மொழி உயிரை வளர்க்கிறது. உயிரை வளர்க்கும் உயர்வு இருப்பதால் தான் அதைத் தாய்மொழி என்கிறோம். 
* அறிவுத்தெளிவைத் தவறவிடாதே. ஓயாமல் தொழில் செய்து கொண்டிருந்தால் நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். 
- பாரதியார்