Saturday, April 27, 2013

ஆனந்தம் எங்கே


ஆனந்தம் எங்கே
நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசாப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக் கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளை குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.
மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விச்ஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது. எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா. யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த  ஞானம், ஆனந்தம் நாம் என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.
வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட நம்முடையது என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம் சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாக குஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயல் என்னுடையது என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவனுக்கு மனம்
குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவா செய்கிறது. அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிஷ்டம் அடிக்கிறதே என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம் இருந்த மட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
இன்னோர் உதாரணம் சொல்கிறேன். என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அவற்றுக்கு சித்தப்பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாக வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு நேர்மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார். அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு மூத்தாள் பிள்ளையோடு ஒத்துவரவில்லை. ஏகச் சண்டை போட்டு குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து மூத்தாள் பிள்ளை இளையாளுக்குப் பில்லி சூன்யம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப்பிரமை ஏற்படும்போது கலலைப்படுகிறார்களென்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவனுக்கு அவனிடம் நம்முடையவன் என்ற சம்பந்தம் போய் விட்டது. இளையாளிடம் மட்டும் நம்முடையவன் என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் அவளுக்கு ஹானி இல்லை என்றால் இவர் ஆனந்தப்படுகிறார்.
மாயைக்கு ஆளான நான் என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கிற அந்த வெறும் நான் எத்தனை ஆனந்தமயமாக இருக்கும். வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால், அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன. கசப்பான துக்க உலகத்தின் நான் என்பதின் மாயக் கிரணங்கள் சம்மந்தப்படுகிற போதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம். என்றால், அந்த நான் மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது எத்தனை தித்திப்பாக ஆனந்த மயமாக இருக்கவேண்டும். சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக்கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப் பார்க்கிறோம். மாயச்சட்டியை உடைத்து விட்டால் ஆனந்த ஜோதிர் மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொறுத்துப் பல வேறு அளவுகளில் ஒளி வெளி வந்தாலும் உள்ளேயிருப்பது ஏகஜோதிதான். நாம் மாயச்சட்டியை உடைத்து விட்டால் உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்றான ஆனந்தரூபமாகவே தெரியும்.
மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகளும் இருக்கும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஒர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைக் கொடுக்கிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லாம் இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.
ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகள் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுகளுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். எப்படி ஆசையை அடக்குவது. எப்படி மனத்தை நிறுத்துவது. எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது என்று கேட்கிறவர்கள் அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும். முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரகம் செய்வாராக

கண்ணன் சொன்னான் கம்பனும் சொன்னான்


கண்ணன் சொன்னான் கம்பனும் சொன்னான்
ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது. குழப்பமாயிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.
நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன என்று கீதையில் ஒரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே. இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.
ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமில்லை. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
பொம்மலாட்டப் பொம்மை மாதிரித்தான் சகல பிராணிகளும். உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். (ஈச்வர, ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா) என்கிறார்.
இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன என்று கூறுவபரே, என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை. நானும் ஒரு பொருளும் இல்லை என்று கூறுகிறார். ( ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷி அவஸ்தித) இங்கே ஆத்மா எல்லாலற்றையும் கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது.
இது என்ன குழப்புகிறாயே என்றால், நான் எல்லாருக்கும் விளக்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய:) அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத:) என்று ஒரு போடு போடுகிறார்.
இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது. ஒன்றும் புரியவில்லையே என்று தோன்றுகிறதா.
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். நான் ஒருவனுக்கும் விளக்க மாட்டேன் என்று பகவான் சொல்லியிருந்தால், ஆயிரம்பேர் இருந்தால் ஆயிரம்பேருக்கும் விளக்க மாட்டேன் என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, நான் எல்லோருக்கும் விளக்க மாட்டேன் என்றால், ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம் ஒருவனுக்காவது விளக்குவேன் என்றுதான் பொருள். பகவான் எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன் என்றாரேயன்றி ஒருவனுக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.
அந்தச் சிலர் யார். இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன். ஒரு பொருளும் என்னிடம்
இல்லை என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு ஐயோ, பாம்பு பாம்பு என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன. மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.
இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம். மாலைக்குள் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படிதான். இரண்டும் இண்மைதானே.
பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் விழுங்கி விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி இது மாலைதான் என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது. மாயையினால் முடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விளக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே. அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கின்றபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, என்னிடத்திலும் பொருட்கள் இல்லை என்று கூரிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் எனபதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா.
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேத்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.
அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பெய்ம்மை அரவு - மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.
நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.

தெய்வத்தின் குரல்


அன்பும் அருளும்
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழுமானால் குடும்பத்தின் தலைவன் முயன்று அந்தக் குடும்பத்தில் நிம்மதி நிலவச் செய்வதைப் பார்க்கிறோம். நாட்டில் அரசியல் பிரச்சனைகளோ கொந்தளிப்போ எழுமானால் நாட்டுத் தலைவர்களும் அரசாங்கமும் தலையிட்டு அதனை அடக்குவதைக் காண்கிறோம். யுகதர்மம் சீர்குலைந்து உலகத்துக்கே உபாதை ஏற்படின் யார் தீர்த்து வைக்க முடியும்.
தெய்வத்தினால் மட்டுமே அது இயலும். தெய்வம்தான் மனித வடிவமெடுத்து நாயன்மாராகி உலகத் துன்பங்களைத் தீர்க்கமுடியும்.
இன்று அவதார புருஷராக - நாயன்மாராக- உலக குருவாக ஒளிரும் ஸ்ரீ பெரியவர்கள் தாம்குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு சங்கடங்களுக்கு மார்க்கம் சொல்ல வல்லவர்களாக, துன்பத்தைப் போக்க வல்லவர்களாகத் திகழ்கிறார்கள்.
பெரியவர்களிடம் போனால் நம் இன்னல்கள் இன்பமயமாகின்றன. மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. அந்த தெய்வ சன்னிதானத்தின்முன் நின்றால் ஒரு சாந்தி கிடைக்கின்றது. குளிர் பூந்தென்றல் நம் மேனியில் படுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஒரு துணிவு, தெம்பு, தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இவை அவர்கள் பால் முழு ஈடுபாடு கொண்டவர்கள் தினசரி உணரும் உண்மை, (கடவுளிடமும் பெரியவர்களிடமும் முழுபக்தி கொண்ட கூட்டம் மட்டுமே அந்தச் சன்னிதானத்தின் முன்பு இத்தகைய இன்பானுபவ உணர்வையும் உரத்தையும் பெற முடியும்.)
பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள். உலக மக்களின் நன்மைக்காகவே நாழிகை தோறும் பூஜை செய்பவர்கள்.
அவர்கள் செய்த தவமும்-செய்து கொண்டிருக்கிற பேரருளும், பேணிக்காக்கும் பேரறமும் இந்த உலகத்தை வளப்படுத்திக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணலாம்.
பெரியவர்கள் பல்துறை அறிவும் பல்களைச் செறிவும் பெற்றவர்கள். அவர்கள் நடமாடும் தெய்வம் மட்டுமல்ல. நடமாடும் பல்கலைக் கழகமும்கூட, அந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து மக்கள் நல் அறிவு பெற, நாடு நலம் பெற, உலகம் உய்வு பெற, எத்தனையோ அறிவு மொழிகள் அறிவு உறை வடிவில் வந்துள்ளன.
மனித வாழ்வை வளப்படுத்தவும், புனிதப்படுத்தவும் அவர்கள் வேதங்களிலிருந்தும் இதிகாச புராண சாஸ்திரங்களிலிருந்தும் எத்தனையோ மேற்கோள்கள் காட்டிப் பல்வேறு சந்தர்பங்களில் உரையாற்றியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுந்த குரல் காற்றோடு கலந்து போகாமல், என்றும் நின்று நிலவும் வண்ணம் தெய்வத்தின் குரலாகி அவை அச்சு ஏட்டில் பதிவாகிச் சிறந்த நூலாக இப்பொழுது வடிவெடுத்துள்ளது. சொர்ணமூர்த்தியின் எண்ண வடிவங்களே கருத்து வண்ண வடிவங்களாகியுள்ளன.
ஆசாரிய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ, இதிகாசங்களையோ வேதங்களையோ தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்குச் சாறு பிழிந்து தருவதுபோல் இந்நூலில் தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச் சாறுகள்.
இந்து மதத்தின் பெருமையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேதசாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச்சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வகைவில் ஒலிப்பதைக் கேட்கலாம், படிக்கலாம்.
மொத்தத்தில் இது ஒர் அருட்பெரும் அறிவுக் களஞ்சியம். இதைப் படித்தால் பாமரன் பண்டிதனாகலாம், அறிஞர் பேரறிஞனாகலாம். மனிதன் தெய்வமாகலாம், இந்த தெய்வத்தின் குரலை, பல டேப் களிலிருந்தும் கல்கி பத்திரிக்கையின் அருள் வாக்குகளிலிருந்தும், பல்வேறு ஸ்ரீ முகங்களிலிருந்தும், பல்வேறு சமயங்களில் பெரியவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் தொகுத்தும் எடுத்தும் எழுதியவர் காஞ்சிப் பெரியவர்ளிள் அன்பையும் ஆசியையும் பெரிதும் பெற்ற ஆசிரியர் திரு.ரா. கணபதி அவர்கள்.

Dr. V. Irai Anbu IAS