Saturday, September 29, 2012

இருக்க வேண்டும் இரும்பு இருதயம்: இன்று உலக இருதய தினம்


உடல் உறுப்புகளில் இருதயம் முக்கியமானது. இருதய துடிப்பு இருக்கும் வரை தான், உயிர் துடிப்பும் இருக்கும். உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் வேலையை, இருதயம் செய்கிறது. இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளால், இறப்பவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்.,29ம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோய்களில் 80 சதவீத மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவை. 

இதுவே அதிகம்:

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம். ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ.வி., மற்றும் டி.பி., ஆகியவற்றால் 38லட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர். இதிலிருந்து இருதய நோயின் பாதிப்பு எந்தள உள்ளது என தெரிந்து கொள்ளலாம் என, உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இருதய குறைபாட்டுடன் பிறக்கின்றன. உலகில் 10 மாணவர்களில் ஒருவர், அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர். 

என்ன காரணம்:

முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, உழைப்பின்மை, நிம்மதியின்மை போன்றவை இருதய நோய்க்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன. அதேபோல், உலகில் மாரடைப்பால் இறப்பவர்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்போர், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆண்டுக்கு சிறுவர்கள் உட்பட 6 லட்சம் பேர், இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

மாரடைப்பை தடுப்பது எப்படி

* புகை பிடிப்பதை முற்றிலும் கை விடுங்கள். பெண்களுக்கு வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி செய்வதற்கு சமம். எனவே, முடிந்தளவுக்கு உடம்புக்கு வேலை கொடுங்கள். 
* உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் பயன்படுத்தாதீர்கள். இதனால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
* சைக்கிள் ஓட்டுவது நல்லது. 
* இனிப்பு வகைகளை சாப்பிட விரும்பினால் சாக்லேட்டிற்கு பதிலாக, மாம்பழம் எடுத்துக்கொள்ளுங்கள். ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும். 
* பெரும்பாலான நேரங்களில், "எஸ்கலேட்டர்',"லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப் படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். 
* "பாஸ்ட் புட்' உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்புஅளிக்கின்றன.

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?

கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம், தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது, சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது, நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது, சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது, ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.

ஆன்மிக சிந்தனைகள் »பாரதியார்


எங்கும் நிறைந்திருப்பது சக்தியே. அது எல்லையில்லாதது. அதற்கு முதலுமில்லை. முடிவுமில்லை. சக்தியை யாரும் அசைக்க முடியாது. ஆனால், அது எதையும் அசைக்க கூடியது. அடிப்பதுவும் சக்தியே. துரத்துவதும் சக்தியே. கூட்டுவதும் சக்தியே. எல்லாம் சக்தியினாலேயே நிகழ்கிறது. பிணைப்பதும், கலப்பதும், உதறுவதும், புடைப்பதும், வீசுவதும், சுழற்றுவதும், கட்டுவதும், சிதறடிப்பதும், தூற்றுவதுமான அனைத்தும் சக்தியே அன்றி வேறில்லை. ஒன்றாகி இருப்பதும், பலவாகி நிற்பதும் சக்தியே. குளிர்ச்சியும், வெம்மையும் நடைபெறச் செய்வது சக்தியின் தன்மையினால் தான். காதலால் உள்ளம் உருகச் செய்வதுவும் சக்தியே. பகைமை, உறவு, உறுதி, அச்சம் ஆகிய எல்லா உணர்வுகளுமே சக்தியின் வெளிப்பாடுகளே.தெளிவும், மயக்கமும் அவளே. ஐம்பொறிகளால் முகர்வதும், சுவைப்பதும், தீண்டுவதும், கேட்பதும், காண்பதும் எல்லாம் சக்தியின் வேலைகளே. சக்தி பிரம்மாவின் மகளாகவும், கண்ணனின் தங்கையாகவும், சிவனின் மனைவியாகவும் இருக்கிறாள்.அப்போது உமையவளாக இருக்கிறாள். அவளே கண்ணனின் மனைவியாகவும், சிவனின் மகளாகவும், பிரம்மனின் தங்கையாகவும் இருக்கிறாள். அப்போது லட்சுமியாக இருக்கிறாள். அவளே மும்மூர்த்திகளுக்கும் தாயாகவும் விளங்குகிறாள்.
இப்படிப்பட்ட பெருமை மிக்க சக்திதாயே! நீ வாழ்க!

Friday, September 28, 2012

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?


எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?
செப்டம்பர் 27,2012
  
அ-
+
Temple images
விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,சூரியனை 2 முறை வலம் வர வேண்டும், தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

Wednesday, September 26, 2012

கோபத்தை அறவே குறையுங்கள்


* அடக்கம் இன்றி ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும், தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்பவனின் வாழ்வு சிறப்புடையது.
* வழி தவறிச் செல்லும் ரதம் போலப் பொங்கி வரும் கோபத்தினை அடக்கி ஆள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன், மற்றவர்கள் கடிவாளக் கயிற்றைக் கையில் வைத்திருப்பவர்களே.
* எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் போல, அவனை விட்டு அகலும்.
* வயது முதிர்ந்த பெரியோரை வணங்கி மரியாதை செய்துவருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும் பயன்கள் அதிகரிக்கும்.
* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்க வேண்டும். உடலை அடக்கிப் பழக வேண்டும். ஆசையை அடியோடு 
வேரறுத்து, நல்லொழுக்கத்தை பேணி வரவேண்டும். 
* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவைகளை எவன் அழித்துவிட்டானோ, அவனே குற்றமற்ற மேதாவி. அவனே உண்மையான அழகு உடையவன்.
- புத்தர்

Tuesday, September 25, 2012

வளமான வாழ்விற்கு வழிகள் பத்து!


முதுமை என்றாலே தள்ளாத வயது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. முதுமையோடு முடியாமையை இணைத்தே அவர்கள் பார்க்கிறார்கள். முதுமை என்றால் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதும் மன அமைதி இல்லாமல் இருப்பதும் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுகிறார்கள். ஆனால் நூறாவது பிறந்த நாளை சென்ற வருடம் அக்டோபர் நான்காம் தேதி கண்டு நூற்றி ஒன்றாவது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட இருக்கும் ஒரு ஜப்பானிய டாக்டர் இன்றும் தன் மருத்துவத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறார், இப்போதும் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார், உலக நாடுகளுக்குப் பயணித்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

அந்த டாக்டரின் பெயர் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ (Dr. Shigeaki Hinohara). இவர் தன் எழுபத்தைந்தாம் வயதிற்கு மேல் 150 நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த நூல்களில் ’நீண்ட காலம் வாழ்வதும், நன்றாக வாழ்வதும்’ (Living Long, Living Good) மிகவும் பிரபலமானது. இது பன்னிரண்டு லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. இவர் 75 வயதிற்கும் மேற்பட்ட வயதானவர்களுக்காக “புதிய முதியோர் இயக்கம்” (New Old People's Movement) என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலமாக அவர் மக்களை நீண்ட காலம் நலமாய் வாழ உற்சாகப்படுத்தி வருகிறார்.

மனித உடலில் கிட்டத்தட்ட 36000 வித்தியாசமான ஜீன்கள் இருப்பதாகவும் அந்த ஜீன்களை மனிதர்கள் பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். புதிய புதிய துறைகளில் புதிய புதிய முயற்சிகள் மேற்கொண்டு உடலையும் மனதையும் முதியவர்கள் இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் அவர். அது புதிய கலையானாலும் சரி, புதிய விளையாட்டானாலும் சரி புதியவற்றில் உற்சாகமாக ஈடுபடுவதே உடல், மன நலத்திற்கு பேருதவி செய்யும் என்கிறார்.

நூறாண்டு காலத்தையும் தாண்டி வெற்றிகரமாக வாழ்ந்து வரும் அவர் வளமான, நலமான, நீண்ட வாழ்வுக்கு பத்து வழிகளைச் சொல்கிறார். அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1) உற்சாகம் முக்கியம்
உண்பதும், உறங்குவதும் முக்கியமே என்றாலும் அவற்றை விட அதிக முக்கியம் உற்சாகமாக இருப்பது. குழந்தைகள் உற்சாகமாக விளையாடும் போது சாப்பாடு, உறக்கம் மறந்து போய் விளையாடுவது போல அதே உற்சாகத்தை வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்டால் கண்டிப்பாக நம்முள் ஒரு பெரும் சக்தியை உணர்வோம் என்கிறார் அவர்.

2) எடை கூடாதீர்கள்
உங்கள் எடை கூடிக் கொண்டே போகாமல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள் என்கிறார் அவர். சரியான சத்தான உணவுகளை அளவாக உட்கொள்வதும் வயிற்றுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருப்பதும் சுறுசுறுப்புக்கும் உடல்நலத்திற்கும் வழி வகுக்கும் என்கிறார்.

3) திட்டமிடுங்கள்
திட்டமிட்டு வாழுங்கள். அதன்படி இயங்குங்கள். தினமும் நல்ல விஷயங்களில் ஈடுபாடுடன் இருந்தால், எதிர்பார்க்க ஏதாவது ஒன்று எப்போதும் இருப்பதுடன் உற்சாகமும் இருக்கும், மனமும் இளமையாக இருக்கும் என்கிறார் அவர்.

4) எதையும் அனுபவித்து செய்யுங்கள்
எதைச் செய்கிறோமோ, அதில் முழு மனதுடன் ஈடுபட்டு அனுபவித்து செய்தோமானால் ஓய்வு பெறும் எண்ணமே எழாது. அறுபது வயது வரை குடும்பத்திற்காக உழைக்கிறவர்கள், அதற்குப் பின் சமூகத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்து விட வேண்டும். அதையும் அனுபவித்து செய்தோமானால் நாம் நாலு பேருக்கு உபகாரமாக இருக்கிறோம் என்ற திருப்தியில் தனியொரு சக்தியையும் நிறைவையும் நாம் உணர்வோம் என்கிறார்.

5) பெற்றதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
எத்தனையோ கற்கிறோம் என்றாலும் அதனை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டு உதவும் போது அவர்கள் வாழ்க்கையுடன் சேர்ந்து நம் வாழ்க்கையும் சிறப்புற அமைகிறது என்கிறார். அப்படிப் பகிர்ந்து கொள்ளும் போது நம் அறிவையும் புதுப்பித்துக் கொள்கிறோம் அல்லவா?

6) இயற்கைக்கு வாய்ப்பளியுங்கள்
எல்லா வியாதிகளுக்கும் விஞ்ஞான மருத்துவ உதவியையே நாடாதீர்கள் என்கிறார் இந்த மருத்துவர். விஞ்ஞான மருத்துவத்தில் எல்லைகள் என்றுமே உண்டு என்கிறார் அவர். இயற்கை அழகுடன் இயைந்து வாழ்தல், செல்லப் பிராணிகளுடன் மகிழ்தல், இசையில் ஆழ்தல், போன்றவை உடலோடு மனத்தையும் குணப்படுத்துவன. அதை மருத்துவரும் பரிந்துரைக்க முடியாது, விஞ்ஞான மருந்துகளும் தந்து விட முடியாது என்கிறார்.

7) நடங்கள், படியேறுங்கள்
உடலுக்கு வேலை கொடுத்து உங்கள் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள முடிந்த வரை நடப்பது, லிப்டில் போவதற்கு பதிலாக படியேறிச் செல்வது போன்ற சிறிய சிறிய வேலைகளில் பெரிய பலன் உடலுக்குக் கிடைப்பதாக அவர் சொல்கிறார்.

8) பணம், பொருள்களில் மிதமாக இருங்கள்
உண்மையான சந்தோஷத்தை பணத்தாலோ, சேர்த்து வைக்கும் சொத்துகளாலோ நாம் அடைந்து விட முடியாது என்பதால் அவற்றில் ஒரு அளவான, மிதமான மனோபாவம் இருப்பது நல்லது என்கிறார். அவை முக்கியம் என்பதை மறுக்காத அவர் அவற்றை விட திருப்தி அதிக முக்கியம் என்கிறார்.

9) எதிர்பாராதவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
கோடுபோட்டது போல் போவது வாழ்க்கை அல்ல. எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் எதிர்பாராதவையே அதிகம் நடக்கின்றன. அவை எல்லாமே மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருப்பதில்லை என்றாலும் அவர்றிலும் ஒரு படிப்பினையைப் பெறுவதும் நம் முன்னேற்றத்திற்காக ஏதாவது விதத்தில் பயன்படுத்திக் கொள்வதும் நம்மை உயர்த்துவதோடு பக்குவப்படுத்தவும் செய்யும் என்கிறார்.

10) எட்ட முடியாத உயரத்தைக் குறிக்கோளாக்குங்கள்
சாதாரணமாக எட்ட முடியாத உயரத்தை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணிக்கும் போது தான் நம்மிடம் உள்ள கூடுதல் திறமைகளை நம்மால் அறிந்து கொள்ள முடியும். நல்ல ’ரோல் மாடல்’ ஒருவரையும் வைத்துக் கொள்வது நமக்கு ஊக்கசக்தியாக அமையும் என்று அவர் கூறுகிறார்.

அறுபது வயதில் வாழ்க்கை முடிந்து விடுவதாகவும் பின் சாகும் வரை எப்படியோ வாழ வேண்டும் என்பதாகவும் நினைப்பவர்கள் பலர் இருக்க, நூறிலும் ஒரு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை, அதன் உற்சாகமும் குறைந்து விடுவதில்லை என்கிறார் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ. அப்படிச் சொல்பவர் அதை சாதித்தும் காட்டியவர் என்பதால் அவரிடம் இருந்து இவற்றைக் கற்றுக் கொண்டு முடிந்த வரை பின்பற்றினால் நாமும் முதுமையிலும் தளர்ந்து விட மாட்டோம் என்பது நிச்சயம்!.

நமக்கு தேவையான மருந்து

* மனதில் ஏற்படும் ஆசைகள் தான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதனால் பல நேரங்களில் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் ஏற்படாது.
* எல்லோரும் சாந்தமாக இருந்தால் குற்றங்களும் நோய்களும் இராது.
* ஜனங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். தப்பு தண்டாவில் சிக்கிக் கொண்டு கஷ்டப்படக் கூடாது. 
* மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பயிற்சி, பக்தி, தியானம் அவசியம். மூன்றையும் முறையாக கடைப்பிடிப்பவர்கள் எளிதாக மனதை கட்டுப்படுத்த முடியும்.
* மெய், வாக்கு, மனம், பணம் இவற்றால் நாம் பாவம் செய்கிறோம், இந்த நான்கினாலும் நல்ல செயல்களைச் செய்யப் பழக வேண்டும்.
* உலகில் உள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் அதர்ம சிந்தனையே காரணம், இந்த நோய் தீரவேண்டுமானால் பக்தி, சாந்தம் ஆகிய இரு மருந்துகள் தேவை.
* வாழ்வில் சறுக்குவது சகஜம். ஆனால், மேலே ஏறுவதற்கு ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் 

Sunday, September 23, 2012

நியாயமாக சம்பாதியுங்கள்

* முட்டாளின் வழி அவனுடைய கண்களுக்குச் சீராகத்தான் தோன்றும். ஆலோசனைக்குச் செவி கொடுப்பவன் தான் அறிஞனாவான்.
* நேர்மையாளனின் பாதை உதய ஒளி போன்றது. நடுப்பகல் வரை பரிபூரணமாக அதன் பிரகாசம் மென்மேலும் உயர்ந்து கொண்டே போகும்.
* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோவென்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்கிறான்.
* எந்தப் பறவையாயிருந்தாலும் அதன் கண்பார்வையின் முன்னால் வலை விரிப்பது வீணே!
* மனிதனின் இருதயம் அவனுடைய வழியை வகுக்கும். ஆனால், அவனது காலடிகளை வழிநடத்துபவர் கடவுளே.
* சிலரின் பாவச் செயல்கள் விசாரணைக்குப் போகுமுன்பே வெளியாகி விடுகின்றன. மற்றும் சிலருடையதோ விசாரணைக்குப் பிறகு தான் பின் தொடர்கின்றன.
* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானத்தைவிட, நியாயமாய்ச் சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.
* உன் மட்டில் கவனமாயிரு. உன் சகோதரன் உனக்கெதிராக மீறி நடந்தால் கண்டிக்கலாம். ஆனால், மனம் வருந்து வானேயானால் அவனை மன்னித்துவிடு.
-பைபிள் பொன்மொழிகள்

Wednesday, September 19, 2012

எது நிலையான புகழ்.......திருவள்ளுவர்

* இறைவனை வணங்குகிறவர்களை நன்மையோ, தீமையோ பாதிக்காது, துன்பம் என்ற கடலைச் சுலபமாக நீந்திக் கரை ஏறுவர்.
* இன்பம், துன்பம், கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், தன் தூய்மையான மனத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து
விட்டால் துன்பம் இல்லை.
* அன்பை அடிப்படையாகக் கொண்டே மனித வாழ்க்கை சிறப்படைகிறது. அன்புடையவன் தன்னலமற்றவனாக வாழ்கிறான்.
* அடக்கம் உடைய மனிதன் உயர்வடைகிறான். மேலும் உயர்வடைய அடக்கத்தைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
* தான தர்மங்களினால் பெற்ற புகழ் மட்டுமே நிலையானது. அதைத் தவிர இந்த உலகில் பெறும் எல்லாப்புகழுமே நிலையற்றது தான்.
* எந்த சூழ்நிலையிலும் பொதுவாய் சிந்தித்து, நடுநிலைமையோடு வாழ்வதே சிறந்தது. ஒரு மனிதனின் உயர்ந்த தகுதி அது தான்.
* உலகத்தின் மற்ற தொழில்கள் அனைத்தும் உழவைச் சார்ந்தே இருப்பதால், உழவுத் தொழில் தான் உலகில் சிறந்தது.
திருவள்ளுவர்

கோபம் அறவே கூடாது...... கிருபானந்த வாரியார்

* மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக ஓடுவதில்லை. காற்று தனக்காக வீசுவதில்லை. அதுபோல் ஞானிகளும் தமக்காக ஒருபோதும் வாழாமல் பிறர் நன்மைக்காகவே வாழ்கிறார்கள்.
* மலரைச் சுற்றி மணம் கமழ்வதைப் போல, நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ் என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
* கோபம் அறவே இல்லாதவனிடம் தர்மதேவதை பணிவுடன் வீற்றிருப்பாள். அவன் நல்வாழ்வு பெற்று வாழ முழுமையாக அருள்புரிவாள்.
* நாம் அனுபவிக்கும் சுகமோ, பாவமோ அனைத்திற்கும் மூல காரணம் நம் வினைப்பயன்களே. புண்ணியமும், பாவமும் நாம் செய்த வினைகளால் உண்டாகின்றன.
* செடி கொடிகள் வேர் மூலமாகத் தண்ணீரைப் பெற்று வளர்வது போல, கடவுளும் ஏழைகளின் மூலமாகவே உணவினை ஏற்று மகிழ்கிறார்.
* மனம் ஒரு நல்ல சேவகன். அதே சமயத்தில் கெட்ட முதலாளி. மனம் உனக்கு அடிமையானால், அது உனக்கு சேவகனாய் பணி செய்யும். மனம் உனக்கு முதலாளியானால் ஆட்டிப் படைக்கும். 
வாரியார்

Monday, September 17, 2012

ஒழுக்கத்தின் இலக்கணம்

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை.
* ரசாயனத்தைக் கற்பவன் இயற்கை என்னும் புத்தகத்தைப் படித்தறிவது போல, ஆன்மிகத்தைக் கற்பதற்கு படிக்க வேண்டிய நூல் மனித மனம்.
* எல்லையில்லாத சக்தி சுருள் சுருளாக இந்தச் சிறிய மனித உடலுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தியை உணர முயல்வது தான் ஆன்மிகம்.
* சமயம் சார்ந்த தத்துவ உண்மைகளை மூளையில் ஏற்றி கொண்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். உறுதி பிறழாத ஒழுக்கமே ஆன்மிகத்தின் அடிப்படை.
* சுயநலம் ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்கு கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம்.
* மனதிற்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டாக்கும் எதையும் கைவிரலாலும் தீண்டக்கூடாது. பலமே வாழ்வு. பலவீனமே மரணம்.
* கடவுளுக்குச் சமமான ஆற்றல் சாத்தானுக்கும் உண்டு. ஆனால், கடவுளுக்குச் சுயநலம் கிடையாது. 
விவேகானந்தர்

Sunday, September 16, 2012

கணவனின் கடமைகள்

* தாய் தந்தையரும், நெருங்கிய 
உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. 
அச்சொத்து குறைவாகவோ, 
அதிகமாகவோ இருந்தாலும் சரியே...! இந்தப் பங்கு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதாகும். 
*தங்கள் மனைவியரை நெருங்குவதில்லையென்று சபதம் செய்து விலகியிருப்பவர்களுக்கு நான்கு மாதத்
தவணையுண்டு. அதற்குள்(தங்கள் மனைவியரிடம்) அவர்கள் திரும்பி விட்டால் நிச்சயமாக இறைவன் 
மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான்.
* நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்து 
புறக்கணித்து விடுவீர்களானால், மேலும் 
மன்னிப்பீர்களானால் திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் 
இருக்கின்றான்.
*அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பாவிட்டாலும், பொறுமையைக் கைக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், இறைவன் அதில் அநேக நன்மைகளை 
வைத்திருக்கக்கூடும்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து) 

தவிடு நீக்காத அரிசியை உபயோகியுங்கள்.


அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே உட்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம்.

நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.

இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை.

இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர்.

அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு.

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

முன்பு உற்பத்தி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்க்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவு பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.

இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும், வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

முன்பு கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி:

உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல்மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி.

கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்:

* எளிதில் சீரணமடையும்
* மலச்சிக்கலைப் போக்கும்
* சிறுநீரை நன்கு பிரிக்கும்
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
* பித்த அதிகரிப்பை குறைக்கும்
* நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது
* உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.
* சருமத்தைப் பாதுகாக்கும்.
* வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.

கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்

Tuesday, September 11, 2012

பொறுமையால் சுகம் பெறலாம்


* உண்மையான செல்வம் அறிவு மட்டும் தான். எல்லாவிதமான செல்வங்களுக் கும் அறிவு தான் வேராக இருக்கிறது. அறிவிருந்தால் எதையும் வெல்லலாம்.
* சோம்பேறியாக இருப்பது பெரிய குற்ற மாகும். பிச்சை எடுப்போரில் பெரும்பா லோர் சோம்பேறிகள் என்பதே உண்மை.
* பொறுமை இல்லாதவனுக்கு உலகம் எந்நாளும் துன்பமயமாகவே இருக்கும். பொறுமையை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் சுகம் பெறலாம்.
* பொய் சொல்லக்கூடாது. புறம் பேசக் கூடாது. முகஸ்துதி யாக பாராட்டக்கூடாது. தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக்கூடாது.
* எல்லா தெய்வங்களும் ஒன்றே என்பதை உணர்ந்து கொள். இவ்வுலகில் ஒரு தெய்வம் இருப்பது நிஜம். அது அறிவுமயமாக இருக்கிறது. அந்த அறிவுக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையைப் போல இருக்கிறோம். 
* தன்னை மற. தெய்வத்தை நம்பு. நியாயத் தைச் செய்ய பாடுபடு. கடமையில் கவனம் வை. எல்லா இன்பங் களும் உன்னை நாடிவரும்.

Monday, September 10, 2012

சொத்துக்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் ?

இன்றைய காலங்களில் சாதாரண மக்களான நாம்  சொத்துக்கள் வாங்கவேண்டும் என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே நாம் வாங்கினாலும் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது மிக அபூர்வமே. எனவே நாம் எந்த ஒரு சொத்துக்கள் வாங்க முடிவெடுத்தாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகே வாங்கவேண்டும். இல்லையெனில் பின் நாட்களில் பல இன்னல்களில் சிக்கி தவிக்க  வேண்டியிருக்கும் .எனவே நாம் சொத்துக்கள் வாங்கும்  போது  முன்எச்சரிக்கையுடன்  இருக்கவேண்டும். வரும் முன் காப்பது நன்று என்பது போல், முன்கூட்டியே சொத்துக்கள் வாங்கும் போது எந்த நிலையில் தவறுகள் வரலாம் என்பதை தெரிந்துகொள்வது நன்று.அதற்கான  சிலவழிகள்



01. சொத்துக்களை விற்பவர் சட்டப்படி அதற்கு முழு உரிமையாளர என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்

02.விற்பவர் சட்டப்படி அந்த சொத்தின் முழுமையான் உரிமை பெற்றவராக இல்லாமல் இருக்கலாம். எனவே முதலில் அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

03.பத்திரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் சொத்திற்கும் ,நமக்கு காண்பிக்க படும்  இடத்திற்கும் சரியான படி பத்திரத்தில் தகவல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.சம்பந்தமே இல்லாமலும் இருக்கலாம் கவனமாக இருக்கவேண்டும்.

04. நமக்கு விற்கப்படும் சொத்துக்கள் வேறு யாருக்காவது விற்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

05.விற்கப்படும் சொத்தில் ஒரு பகுதி அல்லது பாதியளவு வேறு யாருக்காவது விற்கப்பட்டிருக்கலாம் . அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

06. சொத்தினை விற்பவர் தமக்கு சம்பந்தமில்லாத வேறு இடங்களையும் இத்துடன் இணைத்து விற்கலாம் அதனை கவனிக்க வேண்டும்.

07. சொத்துக்கள் மைனர் பெயரில் இருக்கலாம் அதனை மறைத்து விற்க முற்படலாம் .எனவே விற்பவரின் முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

08. விற்கும் சொத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.வில்லங்க சான்று பெற்று  அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

09. இவை நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட இடமாக இருக்கலாம் அதனை தெரிந்துகொள்ளவேண்டும்.

10. சரியான சட்டபடியான அணுகு பாதை அல்லது ரோடு வசதி உள்ளதா என்பதை அறிய வேண்டும். விற்கும் சொத்தின் பாதையினை பற்றி தவறான தகவல் இருக்கலாம்.

11. மூலப்  பத்திரங்கள் தொடர்பு பற்றிய  தெளிவில்லாமலோ, விற்கமுடியாத  வகையிலான சொத்தாகவோ இருந்தால் அதனை பயன்படுத்தி வங்கி கடன் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும்.

12. பழையக் கட்டடங்களை பொறுத்தவரை முறையான அனுமதி பெறாமல் இருப்பின் கூடுதலான் அல்லது அதிகப்படியான கட்டடங்கள் கட்ட அனுதி பெரும் போது பிரச்சனைகள் வரக்கூடும்.

13. சொத்தினை நாம் வாங்கிய பின் அதனை மற்றவர்களுக்கு விற்பதில் பிரச்சனை வரலாம் அல்லது ஏற்படுத்தப்படலாம்.

14. நேரில்கானும் போது சொத்துக்களின் பரப்பளவில் குறையிருக்கலாம் அல்லது பத்திரத்தில் உள்ளவாறு இல்லாமல் இருக்கலாம் .அளவினை கணக்கிடுவதில் தவறு செய்யப்பட்டிருக்கலாம்.

15. சொத்தின் மதிப்பு தற்போதைய  சந்தை நிலவரப்படியில்லாமல் இருக்கலாம் அல்லது சொல்லக்கூடிய மதிப்புக்கு தகுதியில்லாமல் இருக்கலாம்.

16. விற்பவர் பொது நடைபாதைகளையும்  சேர்த்து விற்க முயற்சிசெய்யலாம் எனவே சட்டபடியான பொது நடைபாதை உள்ளதை உறுதிசெய்யவேண்டும் .

17. பத்திரம் மதிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளில் திசைகளை மாற்றி குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

18. சுற்றுப்புற காலி மனை  , சுற்றுப்புறச் சுவர்கள் அல்லது  சுவர்களின் உண்மையான உரிமை குறிப்பிடாமல் இருக்கலாம்

19. நடைப்பாதைகள் இருப்பின் அதன் உரிமைநிலை தரைத்தளத்தில் எப்படி என்றும் முதல் தளத்தில் எப்படி என்பதை பற்றிய உறுதியான தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

20. கிரையம் முடிந்த பின் கட்டடத்தில் உள்ள மின் சாதனங்கள், விளக்குகள், மோட்டார் சாதனங்கள் போன்றவைகள் அப்புறப் படுத்தப்பட்டிருக்கலாம்  பத்திரத்தில் அதனை பற்றிய  தகவல் தெரிவிக்கப்பட்டிருகின்றதா என சரிப்பார்க்க வேண்டும்.

21.மின் இணைப்புக்கள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதை அறிந்த்துக்  கொள்ளவேண்டும் மற்றும் அதனை பற்றிய தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

22. கட்டடமாக இருப்பின் சரியான காலத்தில் வீட்டு வரி  குடிநீர்  மற்றும் பாதாள சாக்கடை வரி போன்றவை சரியான காலத்தில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டியது.

01  அங்கீகாரம் பெற்ற வரைப்படம் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் குடியிருப்பு கட்டும் இடத்தில் பொதுவான பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள்.

02. கட்டிடம் அங்கீகாரம் பெற்ற வரைப்படத்தின் படி தான் கட்டப்பட்டுள்ளதா என அறிந்துக்கொள்ளுங்கள் .

03. மனையின் உரிமையாளர் மற்றும்  உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவருக்கு, பிரிக்கப்படாத மனை பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்ய உரிமை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்

04. மனையின் உரிமையாளர் மற்றும்  உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவர் , பிரிக்கப்படாத மனையின் மொத்த  பகுதியையும் அடுக்கு குடியிருப்பு வாங்குவோர்களுக்கு மாற்றம் செய்துள்ளாரா என்பதினை சோதித்து உறுதிச்  செய்யவேண்டும்.

05. முழுமையான கட்டுமான பனி முடிந்த பின்னர்,சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தால், அந்த கட்டிடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது கட்டிடம் வரிப்படத்தின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான பணி  நிறைவு  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

06. அடுக்கு மாடி வீடு வாங்குவதில் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் சி.எம்.டி ஏ., வின்  ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தினை தொடர்புக் கொள்ளவும்.

மேலும் எந்த விதமான சட்டச்  சிக்கலுக்கும் விரிவான விளக்கமளிக்க பல இணையத்தளம் உள்ளன . கீழ் காணும்  இணைப்பில் சென்று நமக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெறமுடியும்.


                            தமிழ்நாடு சட்ட ஆலோசகர்கள் 


இதில் உங்களின் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் சட்டரீதியான பதில்கள் இலவசமாக அளிக்கின்றனர் . மேலும் அனைத்து  சந்தேகங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டவல்லுநர்கள் மூலம் சட்டஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குகின்றது.

 நாம் வாங்கும் சொத்தினை எந்த விதமான வில்லங்கமும் இல்லமால் அடைய  மேற்சொன்ன வழிகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

இளைய சமுதாயம் ஏற்றுக்கொள்ள விரும்பாத, நம் முன்னோர்கள் கடைபிடித்த பழக்கவழக்கங்கள்


இன்றைய இளைய சமுதாயத்தினர் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பல நல்ல பழக்க வழக்கங்களை ஏற்றுகொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர். ஏன் இது போன்ற பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்ள கூட விரும்புவதில்லை. சரி நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில நல்ல பழக்கவழக்கங்களை பார்ப்போம். இந்த கருத்துக்களை தெய்வ திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களும்  மற்றும் சில பெரியோர்களும் தொகுத்து வழங்கியதிலிருந்து சில.




௦01.வயிறு பசித்தால்  மட்டுமே உணவினை உண்ண வேண்டும், பிறரின்
    கட்டாயத்திற்காக உணவினை உண்ணக்கூடாது.

02.உணவினை வியாதிக்கு மருந்து உண்ணுவது போல உண்ணவேண்டும்.
    ருசிக்காக உண்ணக்கூடாது. அது உடல் நலனை பாதிக்கும். உண்ணும் போது
    மகிழ்வுடன் உண்ண  வேண்டும்.

03.குழந்தைகளுக்கு முன் எதையும் அவர்களுக்கு தராமல் உண்ணக்கூடாது.
    அதிலும் புகைத்தல், மது அருந்துதல் நிச்சயம் கூடாது.

04.எந்த பானத்தையும் எச்சில் செய்து குடிக்க கூடாது. நாம் குடித்த எச்சில்
    பானத்தையோ அல்லது உணவையோ நம்மை விட பெரியவர்களுக்கு
   தெரிந்தே தரக்கூடாது.

05. உணவினை நிந்திக்க கூடாது , உணவினை வீணாக எறிதல் கூடாது . 
    அன்னதானம் செய்பவர்களை எந்த காரணம் கொண்டும் இழிவாகப் 
    பேசக்கூடாது.

06. பந்தியின் நடுவே எழுந்திருக்கக்  கூடாது, சாப்பிடும் போது
     கோபப்படக்கூடாது, உண்ணும் போது குழந்தைகளை விரட்டுவது, அழுவது
    கூடாது .உண்ணும் போது புறங்கையை நக்குவது, மிக சப்தத்துடன்
    உறுஞ்சுவதுக்  கூடாது.

07. உணவு உண்ணும் போது படுத்துக்கொள்ளக் கூடாது, கால்களை
     நீட்டிக்கொண்டு உண்ணக்கூடாது. முதியவர்களை தவிர மற்றவர்கள்
     தரையில் அமர்ந்துதான் உண்ண  வேண்டும்.

08. ஈராமான ஆடைகளையோ அல்லது ஒற்றை ஆடையுடனோ உணவு 
      உண்ணக்கூடாது.(இவை ஓரளவு வசதியுள்ளவர்களுக்கு, உண்ண
      உணவில்லாத பரம ஏழைக்கல்ல ).

09. நிச்சயம் பாதுகை அணிந்துகொண்டு உணவு உண்ணக்கூடாது. உண்ணும்
      போது முகம்,கைகால்கள் சுத்தம் செய்த பின்னரே உணவருந்த வேண்டும்.

10. தரமான நல்ல நிலையிலுள்ள பொருட்களை மட்டுமே தானமாக
     தரவேண்டும்.தரமில்லாத மற்றும் பாழான பொருட்களை யாருக்கும்
     தானமாக தரக்கூடாது.

11. வயது வந்த பெண்களை தகுந்த காலத்தில்,தகுந்த வரனுக்கு தங்களின்
     வசதிக்கு ஏற்ப திருமணம் செய்து தந்துவிடவேண்டும். பலனை
     எதிர்ப்பார்த்து அவர்களின் திருமணத்தை தள்ளி வைத்தல் கூடாது.

12. கர்ப்பமாக உள்ள பெண்கள் சூரியன் மறையும் நேரத்தில் உணவு
      உண்ணக்கூடாது. ஆடையில்லாமல் வெற்று உடலுடன் குளித்தல் கூடாது.
     மாலை நேரத்தில் உறங்குதல் கூடாது.

13. கர்ப்பமான பெண்கள் மன அமைதித்தரும் பாடல்கள் மற்றும் அன்பு
      பாசம்,தைரியம் வளர்க்கும் கதைகள் கேட்பது,படிப்பது  போன்றவற்றில்
     இடுபாடுக்காட்டவேண்டும்.

14. பொதுவாக பெண்கள், அதிலும்  குறிப்பாக கர்ப்பமான பெண்கள்  நடுநிசியில்
      மயானம் மற்றும் பாழடைந்த கிணறு உள்ள பகுதிக்கு செல்லக்கூடாது.
      கிரஹண காலங்களில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு  வெளிவருதல்
      கூடாது.

15. கிரஹண காலங்களில் வயிற்றில் உணவு இருத்தல் கூடாது.
     கிரஹணத்திற்கு  8 மணிநேரத்துக்கு முன்பாக உணவு
     உண்டு  விடவேண்டும்.

16. பெண்கள் பூசணிக்காயை சுற்றி உடைக்க கூடாது, மனைவி கர்ப்பமான
      காலத்தில், கணவன் பிணம் சுமக்கக்கூடாது மற்றும் சுடுகாட்டிற்கு
     செல்லக்கூடாது.

17. எந்த மதத்துடைய புராண,இதிகாசங்களையும் பழித்தலோ அல்லது கேலி
     செய்தலோ நிச்சயம் கூடாது.

18. வழிப்பாட்டு தளங்கள் மற்றும் பாதைகளில் அசுத்தம் செய்தல் கூடாது.
     ஆண்டவன் வழிப்பாட்டு தளங்கள் உள்ள மலைகளில் மற்றும் அதன் வேறு
     எந்த பகுதியலும் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் கூடாது.

19. பள்ளிகள்,மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்கள் அமைந்துள்ள
     இடங்களில் அசுத்தம் செய்வதோ ,சத்தம்செய்வதோ  மற்றும்  மதுபானக்    .
     கடைகள் அமைத்தலோ  கூடாது.

20. ஆண்டவனின் பெயர் அல்லது படங்கள் உள்ள ஆடைகளை அணிந்து
      கொள்ளக்கூடாது. விளம்பரப் பொருட்களில் எந்த கடவுள் படங்களையும் 
      அச்சடித்து வியாபாரம் செய்தல் கூடாது. அது கடவுளை இழிவு செய்யும்
      செயலாகும்.

21. நகங்களை அளவுக்கு அதிகமாக வளர்தலும், அதனை பற்களால் கடித்து
     துப்புதலும் செய்யக்கூடாது. இதன் மூலம் கண்களுக்கு புலப்படாத
    தேவையில்லாதா கிருமிகள் பரவும்.

22. வாங்கிய கடனை திருப்பிதராமல் ஏமாற்றக்கூடாது. கடன் தருவதையும்,
     பெறுவதையும் தவிர்க்க வேண்டும் அது இருவருக்கும் நன்மை பயக்கும்.

23. பிணத்தின் புகையும்,காலை வெயிலும் மற்றும் இரவில் தயிரும் கூடாது.

24. ஜீவன்களின் முட்டைகளையோ அல்லது அதன் சிசுகலையோ கொள்வது
     கூடாது.

25. காமந்தகாரன், துறவிபோல் வேஷம் போடுபவன், தேசவிரோதி,தர்ம
     சிந்தனை இல்லாதவன், மற்றவர்களை குற்றம் கூறுபவன்,பெண்களிடம்
     தேவையில்லாமல்  சிரித்து சிரித்து பேசுபவன், கடவுளை இழிந்து பேசி
     தன்னை  உயர்த்தி கொள்பவன் இவர்களை வீட்டில் சேர்க்கக்கூடாது.

26. விடிகாலை 5 மணிக்கு விழித்தெழ வேண்டும், விழித்தவுடன் நம்மை .
     தாங்கும் பூமித்தாயை வணங்கி எழ வேண்டும்.

27. தினமும் நீரால் உடல் சுத்தம் மிக்க அவசியம்,வாரம் ஒருமுறை
     கட்டாயமாக தலைகுளியலும் செய்தல் வேண்டும்.

28. காலை, மாலை இரு வேளையிலும் தீபமேற்றி வீட்டின் முன் வாசலை
      திறந்த நிலையிலும், பின் வாசலை மூடிய நிலையிலும் வைத்தல்
     வேண்டும்.

29. வீட்டில் இரு வேலைகளிலும் மணி சப்தத்துடன் கூடிய பூஜை செய்தல்
      வேண்டும்.

30. வாழை இலைகளில் உணவு பரிமாறும் போது உப்பிட்ட பதார்த்தங்களை
      நடு மட்டைக்கு மேலேயும், உப்பில்லாதவைகளை நடு மட்டைக்கு 
     கீழேயும் பரிமாறவேண்டும்.

31.கோவில் இல்லா ஊரில் குடியிருக்க  கூடாது, ஆலய பிரசாதங்களை
     அலட்சியம் செய்தலோ அல்லது வீண் செய்தலோ கூடாது. ஆலயங்களில்
     நுழைந்து விட்டால் வீண் பேச்சுக்கள் மற்றும் அரட்டைகள் கூடாது(
     இக்காலத்தில் செல்போன் பேசக்கூடாது).

32. மனைவி கணவனை பற்றியோ அல்லது கணவன் மனைவியை பற்றியோ
     அடுத்தவரிடம் தவறாக பேசக்கூடாது.

33. இல்லறம் என்ற வண்டிக்கு கணவன் மனைவி என்ற சக்கரம் சீராக
      இருந்தால் தான் பயணம் வெற்றிப்பெறும். கணவன் மனைவியிடையே   
      விட்டுக்கொடுத்தல் வேண்டும்.

34. காமம் என்பது பெண்ணின் மீது வைப்பது மட்டும் அல்ல. காமம் என்பது ஒரு
     பொருளின் மீது வைக்கின்ற அதிகப்படியான ஆசையும்  காமம் எனப்படும்.
     காமத்தின் மகன் கோபம், கோபத்தின் குமரன் மயக்கம்.

35. வசதியில்லாத புதுமண தம்பதியினர் கடவுள் படம் நிறைந்த அறையில்
     தாம்பத்தியம் வைக்க நேரிட்டால் அது தவறில்லை. 
     கணவனும்,மனைவியும் வாழ்வது பிழையன்று. "இல்லறம் அல்லது
     நல்லறமன்று" என்கிறார் ஔவையார் .

36. இறைவன் அனைத்து உயிரிலும் உள்ளான் எனவே கோவில்களில்
      உயிரினங்களை பலியிடக்கூடாது அது மிக பெரிய பாவமாகும் .

37. கோழி முட்டை சைவ உணவாகாது. அதில் கரு இருப்பதினால் அது மாமிச
      உணவே ஆகும். ( காந்தியடிகள் மருத்துவர் கூறியும் கோழி முட்டையை
      உண்ண  மறுத்தார் என்பதை அவரின் வரலாறு மூலம் அறிய முடிகிறது.)

38. பிறர் மனைவியை மனதினால்  கூட நினைக்கக்கூடாது, பிறர் சொத்தினை
     அபகரிக்க கூடாது, தேவையின்றி பருவ பெண்களை தொட்டு பேசக்கூடாது 
     அது நமது சகோதிரியாக இருந்தாலும் கூட.

39. எப்பொழுதும் பிறர் மனம் புண்படும்படி பேசக்  கூடாது. வாயில்லா
     ஜீவன்களை  துன்புறுத்தக்கூடாது.

40. தாய்,தந்தை, குரு  மற்றும் வயது முதிர்ந்த பெரியவர்களின்  சாபத்திற்கு
     ஆளாகக்கூடாது.

41. நமது கடமையை பிறர் செய்விக்க கூடாது.

42.தானம் தர யோசிக்கக்கூடாது, தந்தபின் தந்ததிற்காக வருந்தக்கூடாது,
     பெற்றவரின் சொத்தாக மாறிய பின் நாம் சொந்தம் கொண்டாட கூடாது.

43. இளைஞ்சர்கள் சிறிது நேரமாவது குழந்தைகள் மற்றும் உறவினருடன் பேசி
      பழகி இன்பதுன்பங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

44. தீண்டாமையை ஒரு போதும் ஏற்கக்கூடாது. யாரையும் தள்ளிவைத்து   
      வாழ்தல் கூடாது.

45. அரசாங்க நெறிமுறைகளை தவறாமால் கடைபிடிக்க வேண்டும்.
      அரசாங்கத்துக்கு புறம்பாக நடக்க கூடாது. தவறை அகிம்சைவழியில்
      சுட்டிக்காட்டலாம், அதிகாரத்தை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

46. வயதானவரையும், நோய்வாய்பட்டவரையும் அலட்சியம்  செய்தல்                       
      கூடாது. 

47.சாலை விதிகளை மீறக்கூடாது . சட்டம் பொதுவானது எந்த ஒரு தனி
     மனிதனும் அதனை மீறி நடக்க உரிமையில்லை.

48. இயற்கை வளங்களை அழித்தல் கூடாது.வாழும் காலத்தில் நம்மால் 
     முடிந்தது ஒரு மரமாவது வளர்க்கவேண்டும். நமக்கென என இருத்தல்   
      கூடாது.
49. மனைவியை தவிர பிற பெண்களிடம் உறவு வைத்தல் கூடாது.   
     ஒருவனுக்கு ஒருத்தி என மரபு மீறாமல் வாழ்தல் வேண்டும். பகல்
     பொழுதில் கணவன்,மனைவி உறவு வைத்தல் கூடாது. பெற்றோர்,   
     பெரியவர்கள்  மற்றும் குழந்தைகள் இருக்கும் போது கணவன்,  மனைவி 
     கண்ணியமின்றி  நடத்தல் கூடாது.

50. உணவு  பொருட்களில்  ஏமாற்றுதல் கூடாது. கையூட்டு பெறுதல்   பாவம்
      அதனை செய்யக் கூடாது.அது நேரடியாக இல்லாமல் மறைவாக பிறருக்கு
      செய்யும் துரோகம்.