Saturday, August 11, 2012

ஆன்மிக தகவல்கள்»இந்து

* பூஜையறையில் தனியாக முருகனின் வேலாயுதத்தை மட்டும் பூஜிக்கலாமா?
கே.ராஜேந்திரன்,மதுரை

முருகனின் ஞானசக்தி வடிவமே வேலாயுதம். இதைத் தனியாக வைத்து பூஜிக்கலாம். மலேசியா பத்துமலை, இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் மூலஸ்தான கருவறையில் வேலாயுதம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

** கோயில் வீதியில் குடியிருப்பவர்கள் கோபுரத்தை விட அதிக உயரத்திற்கு வீடு கட்டலாமா?
அழகப்பா ராஜேந்திரன், செங்கல்பட்டு

பொதுவாக விமானத்தை விட உயரமாகக் கட்டுவதே தவறு என்றிருக்கும் போது, கோபுரம் உயரத்துக்கு எப்படி கட்டலாம்? கோபுரம் வேறு, விமானம் வேறு. கோபுரம் என்பது கோயில் நுழைவு வாயில். இது உயரமாகக் கட்டப்பட்டிருக்கும். விமானம் என்பது கருவறை மேல் அமைந்திருக்கும். 

* தவிர்க்க முடியாத பட்சத்தில் ராகுகால வேளையில் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் பரிகாரம் உண்டா?
டி.கே.சுகுமார், கோயம்புத்தூர்

ஞாயிறு ராகுகாலத்தை தவிர, மற்ற நாட்களில் துர்க்கையை மனதார வழிபட்டு அந்தப் பணிகளைச் செய்யலாம்.

* கடைகளில் பலவிதமான ஜபமாலைகள் விற்கின்றன. துர்க்கை பக்தனான நான் எந்த ஜபமாலையைப் பயன்படுத்த வேண்டும்?
டி.பூபதிராவ், காஞ்சிபுரம்

பொதுவாக ருத்ராட்ச மாலையை எந்த தெய்வ ஜபமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அதற்கு அடுத்த நிலையில், துளசி மணிமாலையைப் பயன்படுத்தலாம்.

* கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்?
ச.வெங்கடேசன், சிந்தாதிரிப்பேட்டை

பசுமாடு எல்லா தெய்வங்களின் வடிவாக உள்ளது. நாம் குடிபுகும் வீட்டிற்கு எல்லா தெய்வங்களின் திருவருளும் கிடைத்த பிறகு அதில் குடிபுகுந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.

* உடல்நிலை காரணமாக விரதத்தை தவிர்த்து சத்துள்ள உணவை உண்ணும்படி வைத்தியர் எனக்கு ஆலோசனை கூறுகிறார். என்ன செய்வது?
கே.ஜெகன்நாதன், திருப்பூர்

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உடம்பைக் கோயில் என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடவுள் மீது பக்தி செலுத்த உடம்பு ஆதாரமாக இருக்கிறது. அதைப் போற்றிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். அதனால், முடிந்தால் மட்டுமே விரதத்தை மேற்கொள்ளுங்கள்.

No comments: