Saturday, August 11, 2012

குளிர் அறையில் கொதிப்பு


பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கூடாது. யாசகம் வாங்கி சோம்பேறியாக வாழ்வதும் கூடாது. பிறர் பொருளில் நெய்யும் பாலும் உண்பதைக் காட்டிலும் தன் உழைப்பினால் தண்ணீரும் சோறும் உண்பதே சிறப்பானதாகும். மூன்று பொருள்களை மிச்சமாக வைக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை நெருப்பு, கடன், பகை என்று குறிப்பிடுகின்றன. நெருப்பு மிச்சமிருந்தால் அந்த இடத்தையே பொசுக்கிவிடும். கடன் மிச்சமிருந்தால் வளர்ந்து சுமையாகி விடும். பகைவன் மிச்சமிருந்தால் சமயம் பார்த்து நம்மை அழித்து விடுவான். எந்த நேரம் இறைவனுடைய திருநாமம் நினைக்கப் பட்டதோ அந்த நேரம் எல்லாம் நம்முடைய நேரமாகும். எந்த பணம் தர்மத்திற்காக செலவழிக்கப்பட்டதோ அது நம்முடைய பணமாகும். இவ்விரண்டும் எப்போதும் உதவ நமக்காக காத்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி என்பது செல்வச் செழிப்பிலோ அல்லது பெரியமாட மாளிகையிலோ கிடைப்பதில்லை. ஏர்கண்டிஷன் அறையில் இருக்கும் ஒருவன் மனக்கொதிப்புடன் இருக்கக்கூடும். ஆனால், உச்சி வெயிலில் விறகினைப் பிளப்பவனின் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். மகிழ்ச்சி என்பது மனநிலையைப் பொறுத்ததே தவிர பணத்தைப் பொறுத்தது அல்ல.   கிருபானந்த வாரியார் 

No comments: